
மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி - அனுஷா திருமணம் இன்று காலை மதுரையில் தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் கோலாகலமாக நடந்தது. மணமக்களை முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், துணை முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வாழ்த்தினர்.
முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை ஐகோர்ட் வக்கீல் சீதாராமன் மகள் அனுஷாவுக்கும் திருமணம், மதுரை தமுக்கம் மைதானத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் இன்று கோலாகலமாக நடந்தது. திருமணத்துக்கு வந்தவர்களை முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மு.க.முத்து, மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., முரசொலி செல்வம், செல்வி செல்வம், கயல்விழி - வெங்கடேஷ், அஞ்சுக செல்வி - விவேக், உதயநிதி ஸ்டாலின், அறிவுநிதி, சீதாராமன் குடும்பத்தினர் வரவேற்றனர்.
மணமேடையில் திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.10க்கு தொடங்கியது. மண விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 9.47க்கு முதல்வர் கருணாநிதி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, மணமகள் அனுஷா கழுத்தில் அதை மணமகன் துரை தயாநிதி கட்டினார். பின்னர் முதல்வர் மற்றும் தயாளு அம்மாள் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர்.
மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர். மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், வயலார் ரவி, குலாம்நபி ஆசாத், ஜி.கே.வாசன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாழ்த்தினர்.
திருமணத்தையொட்டி, மதுரை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. திமுக கொடி தோரணங்கள், வண்ண விளக்குகளால் மதுரையின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஜொலித்தன. திருமண நிகழ்ச்சிகள் 5 இடங்களில் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருமண பந்தலில் சிறப்பு சைவ விருந்து அளிக்கப்பட்டது. கூட்டத்தினர் அனைவரும் விருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக ராஜாமுத்தையா மன்றம், காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு திருமண மண்டபங்களிலும் விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கள்ளழகர் திருக்கோயில், நரசிங்கப் பெருமாள் கோயில், மதுரை நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர், பார்வையற்றோர் இல்லங்களிலும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா, சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வேலு, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், நேரு, தங்கம் தென்னரசு, தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் ஏராள மானோர் திரண்டு வந்திருந்தனர்.
முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் கமல்ஹாசன், அஜித், பிரபு, மாதவன், சூரியா, கார்த்தி, வடிவேல், விவேக், ஸ்ரீகாந்த், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜேஷ், தியாகு, வாகை சந்திரசேகர், ஏ.எல்.ராகவன், எம்.என்.ராஜம், சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் மற்றும் டிஜிபி லத்திகாசரண் உட்பட அரசு அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.