Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

கோரிப்பாளையம் திரைவிமர்சனம்!

Written By Raveendran on Saturday, June 19, 2010 | Saturday, June 19, 2010

சென்ட்டிமென்ட்டில் நனைத்தெடுத்த அருவா! அது சீறிப்பாய்வதுதான் கோரிப்பாளையம். 'இந்தாரூ....' என்று யாராவது மதுரை பாஷையில் பேச வந்தாலே மாருவலி வர்ற அளவுக்கு போயிட்டு இருக்கு தமிழ்சினிமா. ஆனாலும் துணிச்சலா மதுரையிலேயே மறுபடியும் 'ஆங்கிள்' வச்சுருக்காரு ராசுமதுரவன்.
சரக்கும், சைட் டிஷ்ஷ§மா திரியுற நாலு உருப்படாத பசங்க. அவங்க வாழ்க்கையில் நடக்கிற சொந்த பந்த சோகங்கள், மற்றும் அநாதை 
அழுகாச்சிகள், காதல், கட்டி உருளல் என்று சகல திசைகளிலும் பார்வையை செலுத்தியிருக்கிறார் இயக்குனர். முணுக்குன்னு சில காட்சிகளில் முட்டிகிட்டு வருது அழுகை. பல காட்சிகள் சொரேர். அடுக்கடுக்கா விழும் பிணங்கள், அதுக்கு கொள்ளி வைக்கிற வரை நீளும் காட்சிகள்னு பக்கத்து சீட் ஆசாமி நம்ம சட்டையில மூக்கு தொடைக்கிற அளவுக்கு போகுது சென்ட்டிமென்ட். ராசுமதுரவன் படத்தில் இது இல்லாமலா? போகட்டும்...

யாரோ ஒரு பொண்ணு நிக்கிற இடத்தில இந்த பசங்க எதார்த்தமாக நிற்க போக, பொண்ணுக்கும் பொறுக்கிகளுக்கும் லவ்வுன்னு போட்டுக் கொடுக்கிறார் ராஜ்கபூர். ஏன்? காரணம், இவருக்கும் பசங்களுக்கும் முன்பகை. இந்த நேரத்தில் களவாட போற பசங்க குறிப்பா அந்த பொண்ணு வீட்டுக்குள்ளேயே குதிக்க, கள்ளத்தொடர்புன்னு முடிவுக்கு வர்ற அண்ணனுங்க தங்கச்சியையும் கொன்னுட்டு பசங்களையும் விரட்டி விரட்டி வெட்டித்தள்ள, ஆரம்பிக்கிறது குருஷேத்திர போர். நடுவில தொழில் முறை ரவுடியான விக்ராந்தும் விரட்டுகிறார். கடைசி நாலு ரீலில் ஏ பாசிட்டிவ் ல் துவங்கி இசட் நெகட்டிவ் வரை ஆறாக ஓடுது ரத்தம்!
ஏகப்பட்ட பாத்திரங்கள். அதனால, மைண்ட்ல இருக்கிறவங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கலாம். பிறந்ததுமே அநாதை ஆகிவிடுகிற ராமகிருஷ்ணன், இரண்டொரு சந்திப்பிலேயே பூங்கொடி மேல் காதலில் விழுகிறார். இந்த ஜோடிகளின் அழுகாச்சியை விடுங்க. காதலில் சுவாரஸ்யம். ரோட்டோரத்தில் படுத்திருக்கும் இவர் மீது பூங்கொடியின் நாய் உச்சா போக, அங்க ஆரம்பிக்குது லவ். கடைசியில் வயிற்றுப்பிள்ளையுடன் ராமகிருஷ்ணன் சடலத்திற்கு கொள்ளி வைக்கிறாரு பூங்கொடி.
இன்னொரு ஜோடி ஷரிஷ்-சுவாசிகா. தனது மனைவி நண்பனோட காதலின்னு தெரிஞ்சதும், சுவாசிகாவின் தாலியை அறுத்து அதே நண்பனுக்கு மனைவியை தாரை வார்க்கிறாரு. தட்டிக் கேட்கும் ஊர் மக்களிடம், "அவ என் பெண்டாட்டி. இத கேட்க யாருக்கும் உரிமை இல்ல"ன்னு சொல்வது முறையல்ல என்றாலும், நல்ல டயலாக்!
இவர்களையெல்லாம் தாண்டி, நான் இருக்கேன் என்று பிரேமுக்கு பிரேம் மனசை அள்ளிகிட்டு போவது நம்ம சிங்கம்புலிதான். எம்ஜிஆர் விக், எக்குதப்பான டயலாக்னு மனிதர் குலுக்கியெடுக்கிறார். பேசாம டைரக்ஷன் வேலையை விட்டுட்டு முழுநேர காமெடி நடிகராயிட்டாருன்னா நாடே மெச்சும்! ஆப்பத்தை திருப்பி போட முடியாதுன்னு ஒரு டயலாக் விடுறாரு பாருங்க... தியேட்டரே அல்லுசில்லு ஆகுது. 'மயில்'சாமியின் ஆட்டத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு போனா அவர் தோளிலும் சென்ட்டிமென்ட்டை இறக்கி வைச்சு 'சோக'சாமியாக்கியிருக்காங்க. ப்ச்!
நடிச்சிருக்கிற இயக்குனர்கள் வரிசையில கொஞ்சம் மெச்சூரிடி நந்தா பெரியசாமியிடம். ரவிமரியாவோட செவத்த தோலையும் மீறி கருப்பா கலவரப்பட வைக்குது அவரோட வில்லத்தனம்.

குத்துப்பாட்டுக்கான கோரியோகிராப் எல்லாம் வில்லேஜ் மக்களுக்கான விசேஷ சர்பத்! என்ன இந்த மாற்றமோ... அருமையான மெலடி. சபேஷ் முரளிக்கு ஸ்பெஷல் பாராட்டு. அப்படியே பாலபரணியின் கேமிராவுக்கும் தனி ஜால்ரா போடலாம்.
இன்னொரு பீம்சிங்காவோ, கே.எஸ்.ஜியாகவோ வருவாருன்னு நினைச்சுட்டு இருந்தா, பேரரசு, ஏ.வெங்கடேஷ்களுக்கு போட்டியா குதிச்சிருக்காரு ராசு.மதுரவன். வேணாம்ங்க. உங்க பழைய ஸ்டைலுக்கு போங்க. இதுதாங்க எங்கள மாதிரி ரசிகருங்களோட கோரி(க்கை)பாளையம்!

0 comments:

Post a Comment