Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பிரபல நடிகைகள் சிக்குகிறார்கள்

Written By Raveendran on Monday, August 23, 2010 | Monday, August 23, 2010

கோகைன் போதை மருந்து வாங்கும்போது நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தெலுங்கு முன்னணி நடிகைகள் சிலரும் போதை மருந்து பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கேளிக்கை, பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள், பஃப்கள் ஏராளமாக உள்ளன. சில முக்கிய பஃப்களுக்கு வரும் வி.ஐ.பி.க்கள், நடிகர், நடிகைகளுக்கு கோகைன் போன்ற போதை மருந்து ரகசியமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடங்கள் எப்போதும் ஹவுஸ்புல்லாக இருக்கும். சமீபகாலமாக இதுபற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானுக்கு நிறைய புகார்கள் வந்தன. போதை மருந்து விற்பவர்கள், வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்காணித்து கையும் களவுமாக பிடிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பஃப் மற்றும் ஆடம்பர ஓட்டல்களை போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வந்தனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கிரீன் மாஸ்க் அருகே நேற்று முன்தினம் போலீசார் அதிரடிவேட்டை தொடங்கினர். அப்போது அப்போது இருவரிடம் வாலிபர்கள் போதை மருந்து வாங்கினர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். கோகைன் போதை மருந்து விற்றவர்கள் நைஜீரியாவை சேர்ந்த சிமா கிளமன்ட் (எ) விக்டர், அவரது நண்பர் நரேஷ் என்பதும், அவர்களிடம் கோகைன் வாங்கியவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் ரகுநாத ராஜு என்ற ரகுபாபு (34), பரத் ராஜு (36) என்பது தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறியதாவது: தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வந்தது. பிரபல ஹீரோயின்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 65 பேர் கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை உபயோகிப்பதாக தெரியவந்தது. நகரின் பல இடங்களிலும் 9 பெரிய பஃப்களிலும் இது விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
பஃப்களில் போதை மருந்து மட்டுமில்லாமல் மது மற்றும் போதை மாத்திரைகளை பெண் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். உகாண்டா, தான்சானியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் சிலரும் போதை மருந்து விற்பதாக தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். போதை மருந்து கும்பல் விரைவில் பிடிபடும்.

இவ்வாறு கமிஷனர் ஏ.கே.கான் கூறினார். பிரபல நடிகரின் சகோதரர்கள் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நடிகைகள் பலர் போதை மருந்து பயன்படுத்துவதாக கமிஷனர் கூறியதையடுத்து, அந்த நடிகைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.  ஆதாரங்களுடன் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், நடிகைகள் கிலி அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment