
வேக வேகமாக வளர்ந்து வந்த காவல்காரன் படப்பிடிப்பில் இப்போது கனத்த பாறாங்கல்லை தூக்கி பேப்பர் வெயிட்டாக வைத்திருக்கிறது சூழ்நிலை. இந்தியில் பிசியாக இருந்த அசினுக்கு திடீர் பின்னடைவு. இவரது இரண்டாவது இந்தி படம் செமத்தியாக காலை வாரிவிட, ஒரு பிடிமானத்திற்காக மீண்டும் தமிழ் படத்தை பற்றிக் கொண்டார் அசின். விஜய்க்கும் அசினே மீண்டும் தன்னுடன் ஜோடி போட வந்ததில் அளவுகடந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை அதிக நாள் நீடிக்க விடவில்லை அழகு மயில் அசின். எப்படி? காவல்காரன் படத்தை ஒரேயடியாக முடித்துவிடுகிற திட்டத்தில்தான் இந்த படத்தை ஒப்புக் கொண்டார். நினைத்தபடி வேக வேகமாக போனது படப்பிடிப்பு. இந்த நேரத்தில்தான் ஷெட்யூலில் இல்லாதபடி திடீரென்று லண்டனுக்கு கிளம்பினார் விஜய். அதற்கான காரணங்களை இப்போது சொன்னால் ஆறிப்போன மெது வடையாகிவிடும் என்பதால் நிற்க. ஆனால் இந்த பத்து நாள் பயணத்தில் அசின் கொடுத்த கால்ஷீட் அநியாயத்துக்கு வீணானதாக கவலைப்படுகிறது சித்திக் தரப்பு. இந்த தேதிகளை அவர் மீண்டும் எப்போது கொடுத்திருக்கிறார் தெரியுமா? வரப்போகும் ஆகஸ்டுக்கு பிறகுதானாம்.

திட்டமிட்டபடி இந்தி படத்திற்காக இலங்கை போகிறார் அசின். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு வருகிற அவர், காவல்காரனை முடிக்க ஒத்துழைப்பு தருவது ஆகஸ்டில்தான் என்பதால், இப்போதைக்கு காவல்காரன் தூங்கிக் கொண்டிருக்கிறான். காவல்காரனுக்காக எல்லோரும் காவல் காக்கணும் போல!
0 comments:
Post a Comment