அவ்வை சண்முகி', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம்தான் 'மன்மதன் அம்பு'. மிதக்கும் கப்பலில் மனித உறவுகளுக்கு இடையே நடக்கும் உறவுகளை ரொமான்டிக் கலந்த காமெடியில் சொல்லப்போகும் இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படம் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ்: பாரீஸ் நகரில் தொடங்கி படப்பிடிப்பு பெரும்பாலும் ஐரோப்பாவின் முக்கியத் துறைமுக நகரங்களான பார்சிலோனா, ஜனோவா, அன்னிசி, ஷெத்தோ ரெனாட் உள்ளிட்ட இடங்களிலும், இத்தாலியப் பகுதியில் வெனிஸ் மற்றும் ரோமிலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சில பகுதிகளிலும் தமிழ்நாட்டில், கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகள் சென்னையில் படமாக்கியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட கப்பலில் பெரும்பாலான கதை நிகழ்கிறது. நகைச்சுவை உணர்வுடன், மனித உறவுகளுக்கு இடையேயான உறவுகளை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. நாயகன் கமல்ஹாசன், மேஜர் ஆர்.மன்னாரு கேரக்டரில் நடிக்கிறார். நட்புக்கும் - காதலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அவர் படும் பாடு கலகலப்பாக இருக்குமாம். கமலுக்கு ஜோடியாக வரும் த்ரிஷா இப்படத்தில் தமது சொந்த குரலில் பேசியுள்ளார். அம்பு ஜாக்கி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர், கவிதை பிரியராக இருப்பதுடன், கவிகளையும் வாசித்திருப்பது ஹைலைட். மாதவன் மதனகோபால் எனும் தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருக்கிறார். தீபா என்ற கேரக்டரில் சங்கீதா நடித்திருக்கிறார். இவர்கள் தவிர ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, பாப் பாடகி உஷா உதுப், ஸ்ரீமன், ராம்ஜி உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். 'களவாணி' ஓவியா கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் கமல் நாயகனாக நடித்திருப்தோடு மட்டும் அல்லாமல் திரைக்கதை மற்றும் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் தமிழ் இலக்கியம் முதல் காமெடி வரை பல பாடல்களை உள்ளடக்கியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசையில் நெஞ்சை அள்ளும் மெலடி, வசீகரிக்கும் பாட்டு என ஆறுபாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களுக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாக நடனம் அமைத்து இருக்கிறார் ஷோபி. சண்டைக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள ரமேஷ், ஹைலைட்டாக பிரான்சின் ஹியூகோ பிரல்லியர், மலேசியாவின் வில்லியம் ஹாங் ஆகியோருடன் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். எழுத்தாளர் ஞானி மகன் மனுஷ் நந்தன், இந்தப் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மனுஷ் நந்தன், அனைத்துக் காட்சிகளையும் டிஜிட்டல் வடிவில் படமாக்க ரெட் எம்.எக்ஸ் கேமராவைப் பயன்படுத்தியிருக்கிறார். எப்டியோ மன்மதனின் அம்பு குறி பாத்து பாஞ்சா சரி!
0 comments:
Post a Comment